செவ்வானச் சிதறல்கள்…

புத்தகங்கள்

பொன்னியின் செல்வன் பாத்திரப்படைப்புகள் – 1

by on Feb.01, 2012, under தமிழ், புத்தகங்கள்

முன்னர் நான் டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே அமரர் கல்கி எழுதிய வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வனை வாசிக்கக் கிடைத்தும் வாசிக்காமல் தவிர்த்திருந்தேன். எப்போது பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் புத்தக அலுமாரியில் தெரிந்த அந்த புத்தகங்களை நான் தொடப் பயந்திருந்தேன்.

அப்படி இருந்தும் 2004ம் ஆண்டு ஒருமுறை முதல் பாகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்த போது, வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரமாக குதிரையிலே சென்று கொண்டிருந்த அந்த வர்ணணையை வாசிக்கும் போது ஏனோ அதனுடன் ஒன்ற முடியாமல் போய்விட்டது. குறைந்தது ஒரு ஐந்து பக்கங்கள் மட்டும் வாசித்துவிட்டு அலுத்துவிடவே அப்படியே வைத்துவிட்டேன். மீண்டும் இத்தனை வருடங்களுக்கு பிறகு, அதுவும் சிங்கை நகரிலே வேலைக்குச் செல்லும் போது, அன்டிரோய்டு அலைபேசியில் ஒரு செயலியாக நிறுவி வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் சில ஆண்டுகளாக விட்டுப்போயிருந்த தூங்குவதற்கு முன்னர் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் மீண்டும் தொற்றிக்கொண்டது.

இப்படியாக, வேலைக்கு போகும் போதும் வரும்போதும் தொடரூர்ந்துக்ளிலும், இரவு படுக்கைக்கு முன்னரும் கிடைக்கும் சில மணித்தியாலங்களை பயன்படுத்தி பொன்னியின் செல்வனை முற்றாக வாசித்து முடித்துவிட்டேன். இதனை வாசிக்கும் போது உண்டான உணர்வுகள் விசித்திரமானவை. உண்மையிலேயே, நானும் ஓர் சோழநாட்டவனாக மாறி அந்தக் கதையிலேயே வாழ்ந்து வந்தேன். காட்டாக, கரிகாலன் இறக்கும் போது உண்டான இனம்புரியாத சோகம், நந்தினி அத்துணை எழில் மிகுந்தவளாக இருந்தும் மோகன சுந்தரியாக இருந்தும் அவள் பாண்டிநாட்டினருடன் சேர்ந்து செய்த செயல்களால் ஏற்பட்ட வெறுப்பு, வந்தியத்தேவனுடன் பயணிக்கும் போதெல்லாம் உண்டான உற்சாகம், வீர வைஷணவனுக்கும் வந்தியத்தேவனுகும் இடையில் நடக்கும் கலக்கலான நகைச்சுவையான உரையாடல்கள், பொன்னியின் செல்வனின் ஆளுமை, தியாகம், தெளிவு என அனைத்துமே என்னையும் என்னுடைய சாதாரண நிகழ்வுகளையும் பிரதிபலித்தன. அந்தளவு ஆழமாக, வலுவான பாத்திரங்களாக ஒவ்வொரு பாத்திரங்களையும் கல்கி படைத்திருந்தார்.

அமரர் கல்கியின் பாத்திரங்களை எனது பார்வையில் சற்றே உரைக்க நினைக்கிறேன்:

  • மணிமேகலை: கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையிலே சர்வ வல்லமை பொருந்திய ஒரு இளவரசியாக அறிமுகமானவள். அவளுடைய தமையனின் மூலம் வந்தியத்தேவனின் வீர சகாசங்களை அறிந்து நேரிலே பார்ப்பதற்கு முன்னரே வந்தியத்தேவனின் மேல் அன்பு செலுத்த ஆரம்பித்தவள். தனது துடுக்கான பேச்சினாலும் வஞ்சகம் இல்லாத குணத்தினாலும் இவளின் பாத்திரம் பொன்னியின் செல்வனில் சிறந்து நிற்கின்றது. சோழசாம்ராட்ச்சியத்தை அடுத்து ஆழத்தகுதியான கரிகாலனை மணக்கும் படி வற்புறுத்தியும் வந்தியத்தேவனின் நினைவால் எல்லாவற்றையும் தட்டிக்களித்தவள். யாழ்வாசிப்பதிலும் பாட்டு பாடுவதிலும் மிகையானவள். எல்லாவற்றுக்கும் மேலாக வல்லவரையன் வந்தியத்தேவ்ன் பால் அன்பு கொண்டதன் காரணமாக, செய்யாத கொலையையும் தானே செய்த்ததாக ஒத்துக்கொள்ள துணிந்தவள். நந்தினி, கரிகாலனை கொல்ல முனைந்த போது இவளைப் பயன்படுத்தியே வந்தியத்தேவனை சிக்க வைக்க முயன்றாள். என்ன தான் இருந்தாலும், மணிமேகலையின் தூய்மையான அன்பையும் புனியமான காதலையும் அப்பட்டமில்லாத குழந்தைத் தனத்தையும் என்னால் மறக்கமுடியவில்லை. தவிர கல்கி இவளை வாசிக்கத் தெரியாத பெண்ணாகக் காட்டியிருந்தமை, அக்கால சிற்றரசர்களின் நிலையை கல்வித்தரத்தை சொல்வதாகக் கொள்ளலாமா?
  • பூங்குழலி: பொன்னியின் செல்வனில் மிகவும் பிடித்த பெண்பாத்திரத்தில் ஒன்று பூங்குழலி. பொன்னியின் செல்வன் வாசித்த காலங்களில் கனவுகளில் கூட பூங்குழலி வந்தாள் என்பதை நான் மறுக்க முடியாது. பூங்குழலியின் குணாதிசயங்களையும், கல்கி அவளின் அங்க அடையாளங்களை விமர்சித்த போது, பூங்குழலி என்ற பாத்திரத்துக்கு நான் ஓர் உருவம் கொடுத்தேன். ஒஸ்தி படத்தில் நெடுவாலியாக (ரிச்சா) வரும் அந்தப் பெண்ணின் உருவத்தை அப்படியே பூங்குழலி எடுத்துக்கொண்டாள். அந்த எதையோ தொலைத்து விட்ட்தைப் போன்ற முகம்; ஆனாலும் ஒரு வீரம் நிறைந்த எதற்கும் அஞ்சமாட்டேன் என உரைத்துக்கொண்டே இருக்கின்ற கண்கள், நீண்ட கூந்தல் என அனைத்தையும் நான் நெடுவாலியாகவே உணர்ந்தேன். படகிலே அமர்ந்து “அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்” என்று பூங்குழலி பாடும் போது ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லமுடியாத சோகம் வந்து நெஞ்சை அழுத்தும். சில வேளைகளில் அவள் பிச்சி போல் முறண்டு பிடித்துக் கொண்டு நடந்தாலும், அருண்மொழி மேல் கொண்ட அவளது காதலும், பின்னர் அரண்மனையில் வானதிமேல் அவள் பாராட்டிய பொறாமையும், தன் அத்தையைக் கொன்றவர்களை விரட்டிச் சென்ற சமயோசித புத்தியும் எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, சாந்தன் அமுதனின் காதலை ஏற்றுக்கொண்டதும் என அவளது பாத்திரம் பல பரிணாமங்களை எடுத்து இயம்பும். ஒரு கட்டத்தில் அவள் மேல் நானே என்னை அறியாமல் காதல் கொண்டதும் உண்மை தான். பொன்னியின் செல்வனில் என்னைக் கவர்ந்த முறட்டுப் பெண் அவள்

 

-தொடரும்

Leave a Comment :, , , , , , , , more...

வந்தவர்கள்

free counters