செவ்வானச் சிதறல்கள்…

கவிதைகள்

அதிசயத் திருமணம்

by on Feb.18, 2011, under கவிதைகள்

மூன்றடி இடைவெளியி
தூண்களாய் இரு தென்னைகள்;
ஓலைக் கண்ணறை
தொலைவானைப் படம்பிடித்தது.

செம்மஞ்சள் நிறத்திலோர்
அற்புதக் கிரகம்;
இடையிடையே திருஷ்டிப் பொட்டாய்
மழைமேகங்கள்;
மொத்ததில் அவனில்
புதுமாப்பிளைப் பிரகாசம்.

ஆம்…
இது ஓர் அதிசய,
அற்புத திருமணம்.

மாப்பிள்ளையாய் கதிரவன்
மணப்பெண்ணாய்ப் பூமி;
திருமணத்தின் விருந்தினராய்
பூமியின் சீவராசிகள்;

காலைப் பண்பலையின் மங்களம்
முழங்க – வீதிக்கோலத்தின்
குறுனல் அட்சதையாய்;
சிங்காரச் சிட்டுகளின் குறுகுறுப்பு
சிறு மந்திரமாய்.

தமிழ்ப் பெண்கள் எல்லாம்
குடங்குடமாய் பன்னீர் தெளிக்க
விருந்தினரை கிளிகள் பறந்து
பறந்து உபசரிக்க.

கதிரவண் தன் ஒளிகரங்களால்
பூமிக்கு வண்ணமடித்து
தாலிகட்ட – ஓர்
அதிசயத் திருமணம்

குறிப்பு: இது நான் திருச்சி (தமிழ்நாடு)ல் கல்விகற்றுக்கொண்டிருந்த 2001/2002 காலப்பகுதியில், காவேரித் தண்ணிக்காக குடங்களுடன் பொதுக்குழாயின் முன் நீண்டவரிசையில் நின்றபோது உண்டான கற்பனை ;)

6 Comments :, , , , , , , more...

சுயவிமர்சனம்

by on Jan.07, 2011, under கவிதைகள்

இது ஒரு சுய விமர்சனம். முன்னொரு காலத்தில், கிட்டத்தட்ட ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் கவிதை என்கின்ற பெயரில ஏதாவது எழுதி, யாரிடமாவது காட்டி, அவங்களுக்கு வாசிக்க தெரியாட்டியும் வாசிச்சு காட்டி, கவிதை எப்பிடி என்டு கேட்டு அவங்க காதில இரத்தம் வர வைக்கிறது என்டா ஒரு அலாதிப் பிரியம். அப்பிடி கிட்டத்தட்ட ஒரு பத்து வருசத்துக்கு முதல் எனது நண்பன் ஒருவனுக்கு எழுதின ஒரு நீண்ட கவிதைக் கடிதம். அப்ப எனக்கு மின்னஞ்சல் இருக்கேல்ல. கையால தான் எழுதினனான். நேற்று மீண்டும் மின்னஞ்சலில வந்தது.

இப்ப வாசிக்க சில இடங்களில சிரிப்புத் தான் வருது. இது எழுதிய கால கட்டத்தில், அதிகமாக வைரமுத்துவையும் பா. விஜய் ஐயும் வாசித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அந்த சாயல் அப்படியே பல இடங்களில் எனக்கே தெரிகிறது. இது எனது நன்பன் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது அவர் வாழ்வில் நடந்த சம்பவம். காதல் எத்தனை பேரை கிழித்துபோடுகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சி.

இன்று ஒருவரைக் காதலித்து விட்டு நாளை இன்னொருவரை காதலிக்கும் எத்தனையோ ஆண்/பெண்களைப் பார்த்த எனக்கு இவனது காதல் இப்போதும் விசித்திரமாகப்படுகின்றது. அவனுடன் அவனது இக்காதலைப்பற்றை பேசும் போதெல்லாம் அவனைத் திட்டித் தீர்த்தாலும் அவன் மேல் எனக்கு அளவு கடந்த அன்பும் மதிப்பும் உள்ளது. ஆனால் அவன் தான் நெஞ்சில் அவளது பெயரைப் பச்சைகுத்திக்கொண்டு இன்னமும் வாழ்கின்றான். இப்போதும் அதைப்பற்றை ஏதாவது பேச விளைந்தாலே அவனது குரல் தளதளப்பதையும், கண்கள் கசிவதையும் நான் அவதானிக்க தவறியதில்லை. ஆனால், அந்த பெண் தான் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ என்னவோ தற்போது வேறு ஒருவரை மணந்து விட்டாள்.

இனி கவிதை ( ரெம்பவே கஷ்டப்பட்டு மீண்டும் தட்டச்சு செய்தது)

அன்புள்ள நண்ப!
பலமுறை அழைத்திருக்கிறேன்;
அத்தனையிலும் இல்லாத சிநேகம்
இந்த மூன்றெழுத்தில்
மூத்த தமிழின் வெளிப்பாடுகள் பல,
கவிதைத் தமிழின் கருத்தாழம் பெரிது
ஆம்! தேன் தமிழில் ஓர் கதை
கவிதையில் ஓர் வெளிச்சம்
திருப்பதிகே லட்டுக் கொடுக்கும்
உணர்வு!
விதியின் கட்டாயம்…
விளையாடிவிட்டது
காதல்…!
அன்பின் வெளிப்பாடு
இருமன நதிகளின்
சந்தோச சங்கமம்
இங்கும் இரு பறவைகள்;
அவனது கனவுப் பாதையில்
ஓர் இலட்சியத் திருப்பம்
தோழியே காதலியானாள்;
ஏழு மாத நட்பில்
அவனது மனம் அவளிடம்
பல புதுமைகள் கண்டது
அவளிடம் போசும்போதெல்லாம்
அவன் கொங்கோ காடுகளில்
இறகடித்துப் பறந்தான்.
அவள் புன்சிரிப்பில்
அவன் நைல்நதியின்
தண்மை உணர்ந்தான்
தினம் அவள் கொடுக்கும்
குவளைத் தேநீருக்காக
முழு உணவும் துறந்தான்
மொத்தத்தில் அவள் தான்
உலகம் என்றானான்.
கல்வி மறந்தான் – தன்
சுற்றம் மறந்தான்.
அடுத்த இரண்டு மாதங்கள்…
இருவர் இதயங்களும் இடம்மாறின
அவள் அருகிருக்கும் போது
அவன் புதியதோர் சொர்க்கம்
படைத்தான்
ஆனால்…!
பொல்லாத சமூகத்தின்
மூடநம்பிக்கைத் தீ
காதல் தேன்கூட்டின் – கீழ்
தீப்பந்தமாய் நின்றது…!
அவளுக்கு செவ்வயில் தோசமாம்;
அவள் செவ்வாயில் சீவித்தவனுக்கு
அது புரியவில்லை
இரண்டு மாதக் காதல் சமுத்திரத்தில்
செவ்வாய் தோச பூகம்பம்
அதன் தொடர்ச்சியாக அவன்
மனதில் சுனாமி அலைகள்
சகாராவில் வீழ்ந்த மண்புழுவாய்
சுடுமணலில் சுறாமீனாய்
துடித்தது அவன் இதயம்
வடிந்தது இரத்தக்கண்ணிர்
அன்று முதல்….
நிலவு தொலந்த இரவுகள்
வேகம் குறைந்த சூரியன்
மின்கலம் கசிந்த சுவர்க்கடிகாரம்
படிக்க முனைந்தால்…
புத்தகம் எல்லாம் அவள் முகமாய்
எழுத்துக்கள் எல்லாம் – அவள்
மென்னகையாய்
இங்கு நான் ஒன்று
உரத்து உரைக்க நினைக்கிறேன்…
உலக்க காதலரே…
காமம் இல்லாத காதல் செய்வீர்
காதல்ப் புதுமதம் படைப்பீர்
அதில் தெய்வமும் பக்தரும் நீவீர்
இதய மாற்றாத்தின் சின்னமாய்
ரோஜா பரிமாறும் முன்னர்
அதன் தண்டில் முள் – களையும்
ஆயுதம் செய்வீர்
சாதி வெறிக் குழியில்
மூடநம்பிக்கை புதைப்பீர்
அன்று கொண்டாடுங்கள்
காதலர் தினம்
நாட்கள் கடந்தது – காலச்
சக்கரத்தின் சுழற்சி வேகத்தில்
அன்று பிரிந்தவர் மீண்டும்
எதிரெதிரே நின்றனர்
அப்போது….
அவள் நினைவில் தன் வாழ்க்கையை
தொலைத்த அவன்…
வேறு துணையுடன் அவள்
இப்பொழுதும்…
அவள் சிங்காரக் கண்களில்
தொலைத்த வாழ்க்கையை
வலைவீசித் தேடும் அவன்
தொடர்கிறது தேடல்
தேடல் தொடர்கின்றது – இத்
தேடலின் தேடு பொருள்
காலத்தின் கைகளில்
அன்று நான் அவனிடம்
கேட்க முனைந்து
வாயடைத்துப் போன
இரு வினாக்கள்:
உன் விருப்பிலோ அன்றியோ
தீவைகள் நிறைவேற்ற
உன் பெற்றோர்கள் இன்று!!! நாளை???
பிறப்பு இறப்பு தண்டவாளத்தின்
வாழ்க்கைப் புகையிரதம்
காதல் நிலையத்தில் மட்டுமே
தரித்து நிற்குமோ?
மெழுகுதிரிக்கு கூட இன்னோர்
மெழுகுதிக்கு ஒளியூட்டினால் தான்
மதிப்பு…
நீ…
நம் தேசத்தின்
ஒளிப்பிளம்பு;
எரிமலை நீ
காதல் மழை ஒன்றும்
உன்னை அணைத்துவிடாது
பீனிக்ஸ் பறவை நீ
காதற் சூரியனால் உன்னை
சாகடிக்க முடியாது
சில நொடிகளில் இறந்துபோக
நீ ஒன்றும் ஈசல் இல்லை
என் கானகத்துக் குயில் நீ
மதம் கொண்டு எழும்வரைக்கும்
யானைக்குக் கூட தன்
பலம் தெரிவதில்லை – காதல்
வெறும் தற்காலிக பாகன்
வற்றாத சமுத்திரம் நீ
காதல் சுனாமி அலைகள்
உன்னை அலைக்ககாது
நண்பா…
சற்றே நிமிர்ந்து பார்
காதல் வட்டத்தைத் தாண்டு
உனக்கு அன்பு அதிகம் தான்
நீ காதலிக்க இப்பேரண்டமே
காத்திருக்கிறது
ஏமாற்றங்களைப் படிக்கலாக்கு
இமயம் உன் கழுத்துக்கு கீழே
இலட்சியக் கனவு காண்
காதல் ஓர் வேதியல் மாற்றமே
வேங்கையாய் இரு
காதல்ப் பூனை
உன்னை நெருங்க விடாதே
முதல் அடி எடுத்து வை
வசந்தம் உன் காலடிகளை வழிநடத்தும்
தன்னம்பிக்கையை மூலதனமாக்கு
வெற்றி நிச்சயம்
ஆமாம் நிச்சயம்…!
11 Comments :, , , , , more...

தென்னங்கீற்று இடையழகே…!

by on Dec.02, 2010, under கவிதைகள்

மலைகளெல்லாம்
எழுந்து நின்று;
மழை முகிலை
ஒன்று கூட்ட…!

மலர்வாசம்
பிழிந்தெடுத்து; - நறு
மணத்தென்றல்
உருவாக…!

தென்றலதன்
மென்மை கண்டு;
தேம்பி முகில்
கண்கசிய…!

தென்றலவள்
வருகைக்காய்;
தெருமுனையில்
காத்திருந்தேன்…!

தென்றலென
அழைத்தாலும்;
கூடிச் சண்டை
பிடித்தாலும்…!

தென்னங்கீற்று
இடையழகே;
நீயெனக்கு
உயிரம்மா…!

உன் மேனி
நிறை ஓவியமெலாம்;
ஒன்றையொன்று
உயர்த்தி நிற்கும்…!

எத்துணை தான்
அழகாக உன்;
மேனியெலாம்
மிளிர்ந்தாலும்…!

உன் செவ்விதழில்
பூத்திருக்கும்;
புன்னகைக்கு
நிகருமுண்டோ…!

5 Comments :, , , , , , , more...

கறுப்பு வெள்ளை

by on Jun.12, 2010, under கவிதைகள்

ஏனோ தெரியவில்லை…
சிலகாலமாக தொடுவதில் எல்லாம்
வர்ணங்கள் வற்றிப்போகின்றன…

காலைச் சூரியன் கூட
கறுப்பு வெள்ளையாகவே
கடந்து மறைகின்றான்…!

தோட்டத்து பூக்களின்
தேனுக்கு பதில் வெறும்
பாலே வடிந்து தொலைக்கின்றது…!

வருடிச் செல்லும்
தென்றலின் நறுமணம்
தொலைத்து பலகாலம்…!

இப்போதெல்லாம் பகல்கள்
இரவாகின்றன;
இரவுகள் கனவாகின்றன…!

என்று முளைக்கும்
தேன்வீசும் ரோஜா…?
எப்படி நான் இரவிக்கு
வண்ணமடிப்பது…?

என் இரவுகள் தொலைத்து
தண்நிலா தேடுகின்றேன்…
கால்கள் தேய்ந்து ஓய்ந்தது
தான் மிச்சம்…

ஆனால்…
காற்றைப் பிடித்து
தண்மை சேர்த்து
காரியம் ஆற்றும்
வண்மை உண்டு…!

தேன்னிலா கொய்து
தோட்டத்தில் கட்டி
இருட்டைப் போக்கும்
இயலுமை உண்டு…!

எனக்கும் ஒருநாள்
காலம் வரும்…!
பொறுத்திரு கனவே
தொலைந்துவிடாதே…!

Leave a Comment more...

நீ…. நான்…. அது….!

by on Feb.13, 2010, under கவிதைகள்

நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று…!

ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்…!

ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது….!

ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்…!

அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை

நீ….
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்…!

நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி…
எனக்கில்லை…!

இருந்தாலும்…
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது….!

கடலைப் பார்த்திருப்பய்…!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்

அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்…

கரைகடந்த
அலை – ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.

சிறு தென்றலாய்….
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு – அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல…!

ஆக…,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே…?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?

நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது…
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்…!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்….!

Leave a Comment more...

வந்தவர்கள்

free counters