கவிதைகள்
நம்பிக்கை – காதலர் மாத சிறப்புக் கவிதை – 4
by nirujah on Feb.15, 2012, under கவிதைகள்
திரும்பி வருவோம் என்ற அதீத
நம்பிக்கையில்தான் ஒவ்வொரு
முறையும் காற்று மண்டலம்
நுரையீரல் தொடுகின்றது….
முட்டி மோதி முளைத்து
தளைப்போம் என்ற
நம்பிக்கையில்தான் விதைகள்
மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன…
ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த
சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும்
நம்பிக்கையில் தான் – தினமும்
பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது…
இன்றில்லாவிடிலும் என்றாவது
ஒருநாள் எனை நீ உணர்வாய்
எனும் அதீத நம்பிக்கையில் தான் உன்
நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்…
விட்டொழிந்து போகின்றேன் – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 3
by nirujah on Feb.03, 2012, under கவிதைகள், தமிழ்

இது தரங்கம் புகழ் சுபாங்கன் எனது கொன்றுவிடு – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 1 கவிதைக்கு எழுதிய வேண்டாம்.. விலகிவிடு! எதிர்க்கவிதைக்காக எழுதப்பட்ட எதிர்க்கவிதை.
விட்டொழிந்து போகின்றேன்
என்னருமை மாமோய்…!
வார்த்தைகள் வலித்ததாலா
வருந்தியெனைத் விலக்குகிறாய்…!
யுத்தங்கள் மலிந்த பூமியில்
யுவ ரோஜா கொடுத்தவனே…!
எத்தனை முறை தடுத்தும்
எதேற்சையாய் நடப்பது போல்
எட்டிச் சுவைத்தவனே…!
சத்தியக்காட்டுச் சந்தையிலே
சனிக்கிழமை மாலையிலே
சாண்டிலியன் புத்தகம் தரும்
சாட்டில் எனைத் தொட்டவனே…!
சிரித்த அந்தத் தோற்றத்தில்
சிந்தை மயங்கி நிற்க
விந்தை பல புரிந்து
விந்தணுவும் தந்தவனே…!
மாசம் மூன்றாக…
நாசமாப் போன வயிறு
தோசம் பாராமல்
மோசமாய் வந்து நிற்க…!
செய்த குட்டு வெளியே வந்து – என்ன
செய்ய என்று கேக்க
செண்பகமே… இது வேண்டாமென்று
செருப்பால் எனை அடிப்பது போல்
கருக்கலைக்கச் சொன்னவனே…!
இத்தனையும் பண்ணிய உனை ….
அத்தானே வீடு வந்து
சம்பந்தம் பேசச்சொல்ல
சம்மந்தமே இலாதவனாய்
சாதித்து மறைந்தவனே…!
வாழ்வை நான் தொலைத்து
வாழாவெட்டியாய் நிற்க
பெத்த கடனுக்காய் அப்பன்
பாத்த மாப்பிள்ளையை
கட்ட நினைக்கையிலே
காதல் மொழி பேசுறியே?
நீயொன்றும் சொல்லவேண்டாம்!
நானே போகின்றேன்!
விலகியென்ன விலகி
விட்டொழிந்து போகின்றேன் – ஆம்
விட்டொழிந்து போகின்றேன்…!
நீ… நான்… அது…! – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 2
by nirujah on Feb.02, 2012, under கவிதைகள்

இந்தக் கவிதை முன்னொரு காலத்தில் என் கல்லூரி நண்பர்களால் இப்படி ஒரு தலைப்புக் கொடுத்து எழுதும் படி கேட்ட போது எழுதியது
நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று…!
ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்…!
ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது….!
ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்…!
அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை
நீ….
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்…!
நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி…
எனக்கில்லை…!
இருந்தாலும்…
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது….!
கடலைப் பார்த்திருப்பய்…!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்
அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்…
கரைகடந்த
அலை – ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.
சிறு தென்றலாய்….
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு – அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல…!
ஆக…,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே…?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?
நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது…
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்…!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்….!
கொன்றுவிடு – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 1
by nirujah on Feb.01, 2012, under கவிதைகள், தமிழ்
இதோ, மற்றுமொரு காதல் மாதம் பிறந்து விட்டது. எல்லா மாதங்களிலும் காதல்கள் நடக்கின்றன. காதல்த் தோல்விகளும் நிகழ்கின்றன. என்னவோ தெரியாது இந்த மாதத்தில் மட்டும் அவை சற்றே தூக்கலாக நடக்கும். காதலர்களின் மாதம், எத்தனையோ காதல்களை உருவாக்கப்போகின்றது; எத்தனையோ மனங்களைச் கிழித்துச் சின்னாபின்னமாக்கி தெருவிலே தூக்கி வீசப்போகின்றது. அனைவருக்கும் எனது காதலர் மாத வாழ்த்துக்கள்
தயவு செய்து கேட்கிறேன்!
எனைக் கொன்றுவிடு!
அன்று நாம் விட்டுப் பிரிந்த அந்த நிமிடத்தின்
கம்பிகளைப்
பிடுங்கி எனைக் கொன்றுவிடு!
தயவு செய்து கேட்கிறேன்!
எனைக் கொன்றுவிடு!
தினமும் நீ இறக்கிறாய் – தெரியும்!
மறுபடியும் ஜனனிக்கிறாய் – அறிவேன் நான்!
இறக்கின்ற வலிதந்த வேதனை வார்த்தைகளின்
கொடூரத்தை விடுத்து
எனக்காக மீண்டும் இறக்க வருகிறேன்
என்கிறாயே – வியக்கிறேன் நான்!
தயவு செய்து கேட்கிறேன்!
எனைக் கொன்றுவிடு!
நம்மைப் பொறுத்தவரை,
முடிந்துவிட்ட காவியம் இது!
உனக்கு மட்டும் எப்படித்தான்
தொடர்கதையானதோ – காதல்!
தயவு செய்து கேட்கிறேன்!
எனைக் கொன்றுவிடு!
இறுதியாய்ச் சொல்கிறேன்!
மீண்டும் எனைச் சீண்டாதே!
யதார்த்ததை மீறிக் காதலித்து
தொலைத்த காதல் போதும்!
கடைசியாக ஒருமுறை
யதார்த்தமாக வாழ நினைப்பவள் நான்!
தயவு செய்து கேட்கிறேன்!
எனைக் கொன்றுவிடு!
சொற்கள் கொண்டு
வதைக்காமல் – முடிந்தால்
கற்கள் தேடி எனைக்
கொன்றுவிடு…! கொன்றுவிடு…!
தயவு செய்து கேட்கிறேன்!
எனைக் கொன்றுவிடு!
கவியரங்கம் – மறுபடியும் பாரதி…
by nirujah on Jul.22, 2011, under ஈழம், கவிதைகள், வேறு
பால்குடி என்று செல்லாமாக அழைக்கப்படும் தனஞ்சயனின் அழைப்பின் பெயரில் கடந்த சனிக்கிழமை ( 16 – 07 – 2011 ) பருத்தித்துறை, புற்றளை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான அன்று மறுபடியும் பாரதி எனும் தலைபின் கீழ் ஒரு கவியரங்கம் ஒன்று இடம்பெற்றது.
அரங்கத் தலைவராக லோஷன் அண்ணாவும், “வல்லமை தாறாயோ…” எனும் உப தலைப்பில் எங்கள் திருமலை பவனும், “நெஞ்சு பொறுக்குதில்லையே…” எனும் உப தலைப்பில் நானும், “ஜயமுண்டு பயமில்லை மனமே…” எனும் உப தலைப்பில் சுபாங்கனும், “காதல் போகில் சாதல்…” எனும் உப தலைப்பில் ஆதிரையும் கவியாற்றியிருந்தோம். இதன் வரி, ஒலி மற்றும் ஒளி வடிவங்கள் அவர் அவர் தளங்களிலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
லோஷன் அண்ணாவின் தொடக்கக் கவி, அறிமுகக்கவி மற்றும் தொகுப்புக் கவிக்கு அவருடைய வலைத்தளத்தையும், பவனின் வல்லமை தாறாயோ எனும் கவிக்கு பவனின் தளத்தையும், சுபாங்கனின் ஜயமுண்டு பயமில்லை மனமே கவிக்கு சுபாங்கனின் தளத்தையும், ஆதிரையின் காதல் போகில் சாதல் கவிக்கு ஆதிரையின் தளத்தையும் நாடுங்கள்.
இனி எனது தலைப்பான நெஞ்சு பொறுக்குதில்லையே தொடர்பான கவி:
நெஞ்சு பொறுக்குதில்லையே…
நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஏ…! தமிழின் பெருங்கவியே…!
புரட்சியை மட்டுமே
சுவாசித்து மரித்தவனே…!
இந்த வரிகளை எழுதுகையில்
நீ என்னவெலாம் நினைத்தாயோ – நானறியேன்
என்னையும் பொறுத்துக்கொள்
சைக்கிள் ஓடத்தெரிந்த குற்றத்திற்காக
இங்கே எனை விமானம் ஓட்ட
அழைத்திருக்கிறார்கள்…!
தலைப்பைத் தெரிவு செய்து
மூன்று நாட்களாகியும்
தலைப்புக்கூட எழுத்தப்படாமல்
புதிதாய் வாங்கிய பேனாவின்
கன்னியும் கழியாது
காகிதங்கள் நிறைந்த மேசை
வெறித்த படியே கிடந்தது.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று
என்னத்தை எழுதலாம் என்று
யோசித்து யோசித்தே – என்
நெஞ்சு பொறுக்கவில்லை…!
அண்ணார்ந்து… முகடு பார்த்து….
இறுதிவரை ஒன்றுமே வராமல்
முகடு களன்று விடுமென்றெண்ணி
இடத்தை மாற்றி வெளியே அமர்ந்தேன்
ஆஹா…! அருமையான ஓர் காட்சி
அது என் தந்தை வளர்க்கும்
அழகான வீட்டுத்தோட்டம்
ரோஜா முதல் செம்பருத்தி வரை
அனைத்துமே அட்டகாசமாய்…!
தப்பாக விளங்காதீர்…!
முன்னையது நடிகையும் அல்ல
மற்றையது அவர் படமும் அல்ல…!
என்றோ ஒரு நாள் பார்த்த
காகமொன்று எதிர்வீட்டுக் கூரையில்
தன் சொந்த பந்தங்களுடன்
மாம்பழவிருந்தில் திளைத்திருந்தது.
சற்றே எழுந்து
தோட்டத்துள் செல்கின்றேன்.
ஈரம் குழைந்த மண்..!
செழுமையிலும் குறைவில்லை
ஆங்காங்கே நகர்ந்தன
நாக்கிளிப்புழுக்கள்
ஒன்றோ.. இரண்டோ…
வண்ணத்துப்பூச்சிகள்
கனிந்து சிவந்த
தக்காளி, மிளகாய் கூடவே
வெண்டிச்செடியும்…!
ஓரமாய் மணக்கும்
மல்லிகைப் பூங்கொடி
இன்றுதான் புரிந்து கொண்டேன்
தள்ளாத வயதில்லாவிட்டாலும்
சூரியனுக்கு முன்னே எழுந்து
ஊர் உறங்கியபின்னே
உறங்கும் என் அப்பரின்
இளமை இரகசியம்…!
இயற்கையுடன் வாழ்ந்து
இயற்கையை இரசித்து
வாழுதலிலும் மேலுண்டோ
இவ்வுலகில்…?
ம்ஹ்…! உண்மையிலேயே
நெஞ்சு பொறுக்கவில்லைத் தான்…!
வீட்டிலே உள்ளோர்
வேலைக்குச் சென்றபின்
எனை எழுப்ப யாருமே இல்லாமல்,
நானாக எழும்ப எனக்கு தெரியாமல்
காலைப் பண்பலையில் அலாரம் வைத்து
அறக்கப் பறக்க எழும்பி
அவசரமாய்க் குளித்து
முகத்துக்கு சவர்காரம்
தேய்க்கையிலே தான்
சவரம் செய்யாதது
ஞாபகத்துக்கு வரும்…!
முழுச்சவரத்துக்கு
நேரமில்லாட்டியும்
அங்கை, இங்கை
கொஞ்சம் எடுத்தா….
மேலதிகாரியின் கேள்விக்கு
style என்று சொல்லிவிடலாம் என்று
எல்லாம் முடித்து
வீதிகடந்து
பேரூந்தில் ஏற
ஒரு மென்பொருளாலனின்
நாள் தொடங்கும்…!
சரியான சில்லறை
கொடுத்தால் முறைத்துக்கொண்டும்
கொடுத்த பணத்துக்கு மீதி கேட்டால்
கண்டுக்காமலும் நிற்கும்
நடத்துனரைச் சமாளிப்பதோ – அல்லது
சின்ன மினிக் குடிலாகக் காட்சி தரும்
சோடிகளைச் சமாளிப்பதோ என்று
யோசித்து முடிக்கமுதல்
அலுவலகம் வந்துவிடும்….!
புத்தன், நபி விழுமியமும்,
மறை சைவம் தரு ஒழுக்கங்களும்
மீட்பராய் பார்வந்து
இயேசு சொன்ன சீர்வழியும்
சிந்தியுள்ள திருநாட்டில்
தெருநாய்கள் தரத்துக்கு
தெணவெடுத்து அலைகிறார்கள்
இத்தனை அவசரமாய்
முதலிரவு ஒத்திகைகள்
வெட்டவெளிப் பேரூந்தில்
முகஞ்சுழிக்க செய்துவிடும்…!
வேலை எமைச் சுமந்தாலும்
நாமே வேலையைச் சுமந்தாலும்
ஒன்பது மணிக்கெல்லாம்
அப்பிளிலோ, விண்டோசிலோ
நேரங்கள் கரைக்கவேண்டும்
இடையிடையே facebookக்கும்
தவறாமல் twitter ரிலும்
மூழ்கிவிட்டு வந்தால் தான்
சற்றே மூச்சுவரும்.
தேனீர், உணவு, சிற்றுண்டி
நாளிகை தப்பாமல் மேசை வரும்.
ஆனாலும் என்ன,
கொள்ளையில போகும்
அமெரிக்கன் காரன் போ
என்றால் தான் பெட்டியைக்
கட்ட முடியும்!
ஊரடங்கி…
தெருவோரப் பிச்சைகாரன்
உறவும் அடங்கி
நாய்கள் கூட கத்திக் களைத்து
தூங்குகின்ற வேளை தான்
வீடு போய்ச் சேரமுடியும்…!
எல்லாம் முடித்து
படுக்கையைத் தட்டும் போது
கண்டிப்பாய் மணி இரண்டை தாண்டிவிடும்
இப்படி ஓர் வேலைக்குத்தான்
வெளியே software engineer என்று
அதகளப்படுத்துகின்றார்.
இதுகூடப் பரவாயில்லை…!
கணணிக் கலைஞனுக்கு
கலியாணச் சந்தையில்
இருப்பதோ பெரும் கிராக்கி…!
பெண் குடுக்க பொன்னுடனே
விலையும் வைத்துள்ளார்.
வேலை இருக்கோ இல்லையோ,
எஞ்சினியர் மாப்பிள்ளையா
50 லச்சத்தில் சீதனம் தயாராகும்…!
கொழும்பிலே ஒரு தொடர்மாடி,
எப்போதாவது வந்து தங்க
ஊரிலே ஓர் வீட்டுக்காணி!
ஏனையா இந்த அநியாயம்….!
வேலை என்ற பேரிலே
வெள்ளைக்கு மூளை விற்க…
சடங்கு எனும் பேரிலே
இருப்பதையும் விற்கின்றீரே…!
செத்த பிணம் புணர்ந்த
அரிய இத் திருநாட்டில்
விற்ற ஒன்றை மீண்டும் விற்று
தேசியம் கெடுக்காதீர்….!
அன்னையோ, தந்தையோ…
அன்பு உடன்பிறப்போ…
பள்ளிப்பருவம் முதல் கூடவந்த
நட்புகளோ…!
ஒன்றோ இரண்டோ வார இறுதிகள்
மூன்று மாத இடைவெளியில்
கிடைத்தால் பெரும் பாக்யம்
கூடி நலன்கேட்டு
ஒன்றாய் சாப்பிட்டு
மாலைப் பொழுதொன்றை இனிதாய்க்
களித்திடலாம்…!
இப்படித்தான் அன்றொருநாள்…
அப்பருடன் அளவளாவ
அருமையாய்க் கிடைத்ததொரு நாள்
உங்கெப்படியோ நானறியேன்
எம்மிருவர் சந்திப்புக்கள்
வாக்குவாதத்திலிருந்து
என்றுமே தப்பியதில்லை
வடக்கின் வசந்தம்
எப்பூடி என்றேன்…!
இதுவரை மிஞ்சியிருந்த
பெற்றோலிலும் கலந்து விட்டோம்
என்றார்…!
சும்மா சொல்லக்கூடாது….,
மாமாவின் காதலன் அவர்…!
“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் – பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார்”
என்ற தமிழ்க்கவியே…!
தமிழின் புரச்சியைப் பறைசாற்றி உரைத்தவனே…!
நெஞ்சு பொறுக்குதில்லையே
என்று அன்று எதையோ சொல்லிவைத்தாயே?
அதற்கே உனக்கு நெஞ்சு பொறுக்கவில்யென்றால்
இன்று நீ மீண்டும் வந்தால்
எவ்வாறு குழறியிருப்பாய்?
எனக்கோர் ஆசையுண்டு…!
மீண்டும் நீ வரவேணும்…!
துனீசியா முதல்
மத்தியகிழக்குவரை
வெடித்திருக்கும் புரட்சியில்
சிறிதேனும் எம்மவர்க்கு நீ
மீண்டும் ஊட்டவேண்டும்…!
