செவ்வானச் சிதறல்கள்…

Author Archive

நம்பிக்கை – காதலர் மாத சிறப்புக் கவிதை – 4

by on Feb.15, 2012, under கவிதைகள்

திரும்பி வருவோம் என்ற அதீத
நம்பிக்கையில்தான் ஒவ்வொரு
முறையும் காற்று மண்டலம்
நுரையீரல் தொடுகின்றது….

முட்டி மோதி முளைத்து
தளைப்போம் என்ற
நம்பிக்கையில்தான் விதைகள்
மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன…

ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த
சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும்
நம்பிக்கையில் தான் – தினமும்
பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது…

இன்றில்லாவிடிலும் என்றாவது
ஒருநாள் எனை நீ உணர்வாய்
எனும் அதீத நம்பிக்கையில் தான் உன்
நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்…

Leave a Comment :, , , more...

விட்டொழிந்து போகின்றேன் – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 3

by on Feb.03, 2012, under கவிதைகள், தமிழ்



இது தரங்கம் புகழ் சுபாங்கன் எனது கொன்றுவிடு – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 1  கவிதைக்கு எழுதிய  வேண்டாம்.. விலகிவிடு! எதிர்க்கவிதைக்காக எழுதப்பட்ட எதிர்க்கவிதை.

விட்டொளிந்து போகின்றேன்

விட்டொழிந்து போகின்றேன்

என்னருமை மாமோய்…!

வார்த்தைகள் வலித்ததாலா

வருந்தியெனைத் விலக்குகிறாய்…!

 

யுத்தங்கள் மலிந்த பூமியில்

யுவ ரோஜா கொடுத்தவனே…!

எத்தனை முறை தடுத்தும்

எதேற்சையாய் நடப்பது போல்

எட்டிச் சுவைத்தவனே…!

 

சத்தியக்காட்டுச் சந்தையிலே

சனிக்கிழமை மாலையிலே

சாண்டிலியன் புத்தகம் தரும்

சாட்டில் எனைத் தொட்டவனே…!

 

சிரித்த அந்தத் தோற்றத்தில்

சிந்தை மயங்கி நிற்க

விந்தை பல புரிந்து

விந்தணுவும் தந்தவனே…!

 

மாசம் மூன்றாக…

நாசமாப் போன வயிறு

தோசம் பாராமல்

மோசமாய் வந்து நிற்க…!

 

செய்த குட்டு வெளியே வந்து – என்ன

செய்ய என்று கேக்க

செண்பகமே… இது வேண்டாமென்று

செருப்பால் எனை அடிப்பது போல்

கருக்கலைக்கச் சொன்னவனே…!

 

இத்தனையும் பண்ணிய உனை ….

அத்தானே வீடு வந்து

சம்பந்தம் பேசச்சொல்ல

சம்மந்தமே இலாதவனாய்

சாதித்து மறைந்தவனே…!

 

வாழ்வை நான் தொலைத்து

வாழாவெட்டியாய் நிற்க

பெத்த கடனுக்காய் அப்பன்

பாத்த மாப்பிள்ளையை

கட்ட நினைக்கையிலே

காதல் மொழி பேசுறியே?

 

நீயொன்றும் சொல்லவேண்டாம்!

நானே போகின்றேன்!

விலகியென்ன விலகி

விட்டொழிந்து போகின்றேன் – ஆம்

விட்டொழிந்து போகின்றேன்…!

3 Comments :, , , , , , more...

நீ… நான்… அது…! – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 2

by on Feb.02, 2012, under கவிதைகள்

இந்தக் கவிதை முன்னொரு காலத்தில் என் கல்லூரி நண்பர்களால் இப்படி ஒரு தலைப்புக் கொடுத்து எழுதும் படி கேட்ட போது எழுதியது

நீ… நான்… அது…! – 1

நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று…!

ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்…!

ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது….!

ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்…!

அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை

நீ….
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்…!

நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி…
எனக்கில்லை…!

இருந்தாலும்…
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது….!

கடலைப் பார்த்திருப்பய்…!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்

அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்…

கரைகடந்த
அலை – ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.

சிறு தென்றலாய்….
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு – அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல…!

ஆக…,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே…?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?

நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது…
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்…!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்….!

2 Comments :, , , , , , , more...

பொன்னியின் செல்வன் பாத்திரப்படைப்புகள் – 1

by on Feb.01, 2012, under தமிழ், புத்தகங்கள்

முன்னர் நான் டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே அமரர் கல்கி எழுதிய வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வனை வாசிக்கக் கிடைத்தும் வாசிக்காமல் தவிர்த்திருந்தேன். எப்போது பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் புத்தக அலுமாரியில் தெரிந்த அந்த புத்தகங்களை நான் தொடப் பயந்திருந்தேன்.

அப்படி இருந்தும் 2004ம் ஆண்டு ஒருமுறை முதல் பாகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்த போது, வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரமாக குதிரையிலே சென்று கொண்டிருந்த அந்த வர்ணணையை வாசிக்கும் போது ஏனோ அதனுடன் ஒன்ற முடியாமல் போய்விட்டது. குறைந்தது ஒரு ஐந்து பக்கங்கள் மட்டும் வாசித்துவிட்டு அலுத்துவிடவே அப்படியே வைத்துவிட்டேன். மீண்டும் இத்தனை வருடங்களுக்கு பிறகு, அதுவும் சிங்கை நகரிலே வேலைக்குச் செல்லும் போது, அன்டிரோய்டு அலைபேசியில் ஒரு செயலியாக நிறுவி வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் சில ஆண்டுகளாக விட்டுப்போயிருந்த தூங்குவதற்கு முன்னர் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் மீண்டும் தொற்றிக்கொண்டது.

இப்படியாக, வேலைக்கு போகும் போதும் வரும்போதும் தொடரூர்ந்துக்ளிலும், இரவு படுக்கைக்கு முன்னரும் கிடைக்கும் சில மணித்தியாலங்களை பயன்படுத்தி பொன்னியின் செல்வனை முற்றாக வாசித்து முடித்துவிட்டேன். இதனை வாசிக்கும் போது உண்டான உணர்வுகள் விசித்திரமானவை. உண்மையிலேயே, நானும் ஓர் சோழநாட்டவனாக மாறி அந்தக் கதையிலேயே வாழ்ந்து வந்தேன். காட்டாக, கரிகாலன் இறக்கும் போது உண்டான இனம்புரியாத சோகம், நந்தினி அத்துணை எழில் மிகுந்தவளாக இருந்தும் மோகன சுந்தரியாக இருந்தும் அவள் பாண்டிநாட்டினருடன் சேர்ந்து செய்த செயல்களால் ஏற்பட்ட வெறுப்பு, வந்தியத்தேவனுடன் பயணிக்கும் போதெல்லாம் உண்டான உற்சாகம், வீர வைஷணவனுக்கும் வந்தியத்தேவனுகும் இடையில் நடக்கும் கலக்கலான நகைச்சுவையான உரையாடல்கள், பொன்னியின் செல்வனின் ஆளுமை, தியாகம், தெளிவு என அனைத்துமே என்னையும் என்னுடைய சாதாரண நிகழ்வுகளையும் பிரதிபலித்தன. அந்தளவு ஆழமாக, வலுவான பாத்திரங்களாக ஒவ்வொரு பாத்திரங்களையும் கல்கி படைத்திருந்தார்.

அமரர் கல்கியின் பாத்திரங்களை எனது பார்வையில் சற்றே உரைக்க நினைக்கிறேன்:

  • மணிமேகலை: கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையிலே சர்வ வல்லமை பொருந்திய ஒரு இளவரசியாக அறிமுகமானவள். அவளுடைய தமையனின் மூலம் வந்தியத்தேவனின் வீர சகாசங்களை அறிந்து நேரிலே பார்ப்பதற்கு முன்னரே வந்தியத்தேவனின் மேல் அன்பு செலுத்த ஆரம்பித்தவள். தனது துடுக்கான பேச்சினாலும் வஞ்சகம் இல்லாத குணத்தினாலும் இவளின் பாத்திரம் பொன்னியின் செல்வனில் சிறந்து நிற்கின்றது. சோழசாம்ராட்ச்சியத்தை அடுத்து ஆழத்தகுதியான கரிகாலனை மணக்கும் படி வற்புறுத்தியும் வந்தியத்தேவனின் நினைவால் எல்லாவற்றையும் தட்டிக்களித்தவள். யாழ்வாசிப்பதிலும் பாட்டு பாடுவதிலும் மிகையானவள். எல்லாவற்றுக்கும் மேலாக வல்லவரையன் வந்தியத்தேவ்ன் பால் அன்பு கொண்டதன் காரணமாக, செய்யாத கொலையையும் தானே செய்த்ததாக ஒத்துக்கொள்ள துணிந்தவள். நந்தினி, கரிகாலனை கொல்ல முனைந்த போது இவளைப் பயன்படுத்தியே வந்தியத்தேவனை சிக்க வைக்க முயன்றாள். என்ன தான் இருந்தாலும், மணிமேகலையின் தூய்மையான அன்பையும் புனியமான காதலையும் அப்பட்டமில்லாத குழந்தைத் தனத்தையும் என்னால் மறக்கமுடியவில்லை. தவிர கல்கி இவளை வாசிக்கத் தெரியாத பெண்ணாகக் காட்டியிருந்தமை, அக்கால சிற்றரசர்களின் நிலையை கல்வித்தரத்தை சொல்வதாகக் கொள்ளலாமா?
  • பூங்குழலி: பொன்னியின் செல்வனில் மிகவும் பிடித்த பெண்பாத்திரத்தில் ஒன்று பூங்குழலி. பொன்னியின் செல்வன் வாசித்த காலங்களில் கனவுகளில் கூட பூங்குழலி வந்தாள் என்பதை நான் மறுக்க முடியாது. பூங்குழலியின் குணாதிசயங்களையும், கல்கி அவளின் அங்க அடையாளங்களை விமர்சித்த போது, பூங்குழலி என்ற பாத்திரத்துக்கு நான் ஓர் உருவம் கொடுத்தேன். ஒஸ்தி படத்தில் நெடுவாலியாக (ரிச்சா) வரும் அந்தப் பெண்ணின் உருவத்தை அப்படியே பூங்குழலி எடுத்துக்கொண்டாள். அந்த எதையோ தொலைத்து விட்ட்தைப் போன்ற முகம்; ஆனாலும் ஒரு வீரம் நிறைந்த எதற்கும் அஞ்சமாட்டேன் என உரைத்துக்கொண்டே இருக்கின்ற கண்கள், நீண்ட கூந்தல் என அனைத்தையும் நான் நெடுவாலியாகவே உணர்ந்தேன். படகிலே அமர்ந்து “அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்” என்று பூங்குழலி பாடும் போது ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லமுடியாத சோகம் வந்து நெஞ்சை அழுத்தும். சில வேளைகளில் அவள் பிச்சி போல் முறண்டு பிடித்துக் கொண்டு நடந்தாலும், அருண்மொழி மேல் கொண்ட அவளது காதலும், பின்னர் அரண்மனையில் வானதிமேல் அவள் பாராட்டிய பொறாமையும், தன் அத்தையைக் கொன்றவர்களை விரட்டிச் சென்ற சமயோசித புத்தியும் எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, சாந்தன் அமுதனின் காதலை ஏற்றுக்கொண்டதும் என அவளது பாத்திரம் பல பரிணாமங்களை எடுத்து இயம்பும். ஒரு கட்டத்தில் அவள் மேல் நானே என்னை அறியாமல் காதல் கொண்டதும் உண்மை தான். பொன்னியின் செல்வனில் என்னைக் கவர்ந்த முறட்டுப் பெண் அவள்

 

-தொடரும்

Leave a Comment :, , , , , , , , more...

கொன்றுவிடு – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 1

by on Feb.01, 2012, under கவிதைகள், தமிழ்

இதோ, மற்றுமொரு காதல் மாதம் பிறந்து விட்டது. எல்லா மாதங்களிலும் காதல்கள் நடக்கின்றன. காதல்த் தோல்விகளும் நிகழ்கின்றன. என்னவோ தெரியாது இந்த மாதத்தில் மட்டும் அவை சற்றே தூக்கலாக நடக்கும். காதலர்களின் மாதம், எத்தனையோ காதல்களை உருவாக்கப்போகின்றது; எத்தனையோ மனங்களைச் கிழித்துச் சின்னாபின்னமாக்கி தெருவிலே தூக்கி வீசப்போகின்றது. அனைவருக்கும் எனது காதலர் மாத வாழ்த்துக்கள்

கொன்றுவிடு – 1

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

அன்று நாம் விட்டுப் பிரிந்த  அந்த நிமிடத்தின்

கம்பிகளைப்

பிடுங்கி எனைக் கொன்றுவிடு!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

தினமும் நீ இறக்கிறாய் – தெரியும்!

மறுபடியும் ஜனனிக்கிறாய் – அறிவேன் நான்!

இறக்கின்ற வலிதந்த வேதனை வார்த்தைகளின்

கொடூரத்தை விடுத்து

எனக்காக மீண்டும் இறக்க வருகிறேன்

என்கிறாயே – வியக்கிறேன் நான்!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

நம்மைப் பொறுத்தவரை,

முடிந்துவிட்ட காவியம் இது!

உனக்கு மட்டும் எப்படித்தான்

தொடர்கதையானதோ – காதல்!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

இறுதியாய்ச் சொல்கிறேன்!

மீண்டும் எனைச் சீண்டாதே!

யதார்த்ததை மீறிக் காதலித்து

தொலைத்த காதல் போதும்!

கடைசியாக ஒருமுறை

யதார்த்தமாக வாழ நினைப்பவள் நான்!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

சொற்கள் கொண்டு

வதைக்காமல் – முடிந்தால்

கற்கள் தேடி எனைக்

கொன்றுவிடு…! கொன்றுவிடு…!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

4 Comments :, , , , , , , , more...

வந்தவர்கள்

free counters