செவ்வானச் சிதறல்கள்…

தமிழ் அகராதி விரைவில் தூசுதட்டப்பட வேண்டும்

by on Jan.12, 2012, under தமிழ்

“சாதி என்ற சொல்லை தமிழ்ச் சொல்லகராதியில் இருந்து தூக்குவதற்கு முன்னர் கற்பு என்ற சொல்லைத் தூக்க வேன்டும்.”

இது சில நாற்களுக்கு முன் நான் பேஸ்புக்கில் இடுகையாக இட்டு பின்னர் இது பல கோணங்களில் இழுத்து நீட்டி முழக்கப்பட்ட ஒரு விடயம். அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இருந்தாலும் இது பற்றி இன்னும் கொஞ்சம் என் மனதில் இருப்பவற்றைப் பகிந்து கொள்வதற்காகவே இந்தப் பதிவு.

நம் தமிழ்ச் சமுதாயம், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று போற்றிப் புகழ்ந்து கொண்டு எம்மை நாமே பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நாகரீகத்தில் பழம்பெரும் வரலாறு கொண்டவர் நாம்; சோழ, சேர, பாண்டிய, பல்லவ அரசுக்களால் காலங்காலமாக செழுமையுற்றது எம் இனம்; உலகின் தொன் மொழிகளுள் ஒன்று எம் தமிழ் மொழி என்றும் அதுவே செம்மொழி என்றும், இதற்கு அக்காலத்தில் முதல், இடை, கடை முதலாக சங்கங்கள் வைத்திருந்தார்கள் என்றெல்லாம் போற்றுகின்றோம்.

இவை எல்லாம் உண்மையாக இருக்கலாம். அதற்கு பல சான்றுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை எல்லாம் எம் பழம் பெரும் சமூகத்தின் இறந்த காலம். இப்போது எம் பழம்பெருந் தமிழினத்தின் நிலை தான் உலகம் அறிந்ததே. நாமெல்லாம் நாகரீகம் உடையவர்களாகத் தான் நடந்து கொள்கிறோமா? சாதாரண வீதி ஒழுங்கைப் பின்பற்றுவதில் இருந்து, சாப்பிட்டுவிட்டு மிச்சம் மீதியைப் போடுவது வரைக்கும் வெறும் விலங்குகளாகத் தானே நம் இனம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இதற்கும் மேலாக, தேவை இல்லாத சாதி, வர்ணம் என்று எத்தனையோ பாகுபாடுகள்; பிரிவினைகள். சாதியம் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று ஒரு சாரார் கூவிக்கொண்டு திரிகின்றார்கள். இன்னொரு பக்கம் சாதியத்தின் அடிப்படையில் தான் கல்லூரிகளிலே இட ஒதுக்கீடே கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு சாதி எம் சமூகத்தில் ஒட்டுண்டே வந்திருக்கின்றது. இதனால் நற்பேறு பெற்றோர் ஒருபுறம் இருக்க, வாழ்விழந்தோர் ஏராளம் ஏராள்ம்.

மறுபுறம், கற்பு என்பது என் சமூகத்தில் எவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என்று என்னால் இன்று வரை புரிந்து கொள்ள முடியவே இல்லை.

  • கற்பு பெண்களுக்குரிய உயரிய ஒழுக்கம் என்கிறார்கள் ஓரிடத்தில்
  • கற்பு மனிதனுக்குரியது; ஆண், பெண் இருபாலாருக்கும் பொருதும் என்கிறார்கள் இன்னோரிடத்தில்
  • திருமணம் வரை எதிர்ப்பாலரை (?) மனதளவில் நினையாமை தான் கற்பு என்கிறார்கள் பிறிதோரிடத்தில் [பின்னர் கட்டியவனை/ளை மாத்திரம் நினைக்க வேண்டும்]
  • கற்பு பெண்ணுக்கு மட்டுமே என கூறுபவர்களும் திருமணத்துக்கு முதல் அவளது கன்னித்திரை கிழியாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் [47% பெண்களின் (பாலியல் தொழில் செய்யும் பெண்கள் உட்பட)  கன்னித்திரைக்கு நெகுழும் தன்மை உள்ளதாம், அது எப்போதும் கிழிவதில்லையாம். ஆய்வொன்று கூறுகிறது. 11% பெண்களுக்கு மிக மெல்லிய தடிமன் உள்ள கன்னித்திரையுடன் பிறக்கிறார்கள் இவர்கள் உடற்பயிற்சி செய்யும் போதோ, சைக்கிள் போன்ற வாகனங்களில் இருப்பதற்கு காலைத் தூக்கும் போது இது கிழிந்துவிடும். தவிர தற்காலதில் செயற்கையாக கூட கன்னித் திரையைப் பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ளலாம்]
  • திருமணத்துக்கு முன்னர் சுய இன்பத்தில் ஈடுபடாமை யிலிருந்து உடலுறவு கொள்ளாமை வரைக்கும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் சிலர்.

இப்படி என் தமிழ்ச்சமூகம் கற்புக்கு விதித்து வைத்திருக்கும் வரைவிலக்கணங்கல் எண்ணில் அடங்காதவை. எனக்கு இப்படிப்பட்ட கற்பில் நம்பிக்கை இல்லை. கற்பு மனது சம்பந்தப்பட்டது.

“ஒரு பெண்ணோ ஆணோ, தன்னை நம்பி வந்தவரிடம் இதுவரை இப்படியெல்லாம் நடந்திருக்கிறேன். இது தான் நான் என்று கூறி இருவரும் ஒத்துப்போதல் தான் கற்பு”

தமிழ், கலாச்சாரம், பண்பாடு என்று வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. “Virginity is not a matter of dignity but a lack of opportunity” இது தான் இன்றைய சமூகத்தின் யதார்த்தம். உண்மை. அதற்காக, நாமும் ஆடுமாடுகள் போல் யாருடனேனும் வேண்டும் போதெல்லாம் புணர்ந்து கொண்டு திரியவேண்டுமா என்று கேட்காதீர்கள். ஆனால், இன்றைய வாலிபர்களுக்கு 13 வயதிலேயே பால் சார்ந்த உணர்வுகள் உருவாகிவிடுகின்றன. சிலருக்கு அதற்கு முன்பே. அவர்களுடைய ஓமோன்களையும்(Hormone) கற்பனைகளையும் தூண்டப்படுகின்ற சந்தர்ப்பங்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுய இன்பம் அனுபவிப்பார்கள். இது காலத்தின் தேவை.

ஆக, பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டு எம்முன்னே பயன்படுத்தப்படும் கற்புக்கு எதற்காக அகராதியில் ஓர் இடம்.

:, , , , , , ,

1 Comment for this entry

  • மயூரேசன்

    பழம் பெருமை பேசி அல்லது உணர்ச்சி வசமாகப் பேசி அழிந்து போகும் இனத்தில் எம் இனமும் ஒன்று.

    ஆங்கிலத்தில் வேர்ஜினிட்டி என்று எளிமையாக சொல்லி வைத்த விடையத்தை எம்மூரார் நீட்டி முழங்கி அதிக நிபந்தனைகள் சேர்த்து கற்பு ஆக்கிவிட்டார்கள்.

Leave a Reply

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

வந்தவர்கள்

free counters