Archive for June, 2011
கரப்பான் பூச்சிக் கொத்து
by nirujah on Jun.29, 2011, under அனுபவங்கள், பதிவுலகம்
இந்த சமுதாயத்தில் பலவகையான மனிதர்களைச் சந்திக்கிறோம். பலர் மிகவும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். சிலர் கெட்டவர்களாக இருக்கின்றார்கள். சிலர் நல்லவர்களாகத் தெரிவார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள். சிலர் கொடூரமாகத் தெரிந்தாலும் யதார்த்தத்தில் நல்லாவர்களாக இருப்பார்கள். நான் இப்போது சொல்ல வந்த விடயம் சற்றே வித்தியாசமானது.
இன்றைய இயந்திர உலகில் ஹோட்டலில் சென்று சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நட்ச்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் சரி, சிறிய கையேந்திபவன்களான தெருவோரக்கடைகளாக இருந்தாலும் சரி நாம் சுத்தமான உணவை உண்ணவே விரும்புகின்றோம். நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்பவர்கள் ஆடம்பரம், ரம்யமான சூழல், சமூக அந்தஸ்து என்பவற்றைத் தாண்டி சுகாதாரமான உணவை உண்பதற்காகவும் செல்கின்றார்கள்.
அதிகமானவ நேரங்களில் எமக்கு சிறந்த உணவு கிடைக்கின்றது. எப்போதாவது சில சந்தர்பங்களில், சமையல்காரரின் கவலையீனத்தாலோ அல்லது அவதானக் குறைவாலோ உணவுக்குள் தலைமுடி போன்றன வரவும் தவறுவதில்லை. சிலவேளைகளில் களஞ்சியப்படுத்தலில் உள்ள குறைபாடுகளால் கரப்பான் பூச்சிகள் போன்றவை கூட வருவதாக கேள்விப்படுகின்றோம். உணவு உண்ணும் சந்தர்பத்திலோ அல்லது பரிமாறப்படும் போதோ முடியோ அல்லது அழுக்குகள் காணப்படும் இடத்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டால், தவறை அவர்களே பொறுப்பேற்று புதிய உணவு வகை மட்டுமல்லாது, எம்மைக் குஷிப்படுத்த இலவசமாக இன்னும் சிலவற்றை தருவதும் உண்டு. இல்லாவிட்டால் வாடிக்கையாளர் நீதிமன்றம் வரைக்கும் கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயம் தான் இதற்கு முக்கிய காரணம்.
ஒரு முறை டுப்ளிகேஷன் வீதியில் உள்ள Coffe Bar ல் நண்பர் ஒருவருடன் உணவு உண்ணும் போது, ஒரு சிறிய முடி ஒன்று இருந்து விட்டது. அதன் அளவு வெறும் ஒரு அங்குலத்தை விடக்குறைவு. வீட்டில் நாம் சாப்பிடும்போதோ, அல்லது ஒரு உறவினர் வீட்டில் சாப்பிடும் போதோ அதை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிட்டிருப்போம். ஆனால் என்னுடன் வந்த நண்பரோ அங்கிருந்த உணவு பரிமாறுபவரை அழைத்து அவருடன் மல்லுக்கட்டினார். இறுதியில் மீண்டும் நமக்கு அதே உணவு புதிதாகக் கிடைத்தது மட்டுமல்லாது அன்றைய முழு உணவுக்கான செலவும் எங்களிடம் அறவிடப்படவில்லை. அந்தக்கடையின் வாடிக்கையாளரான நான், அதன் பின் மூன்று நான்கு வருடங்களாகியும் போனது இல்லை. ஒரு குற்ற உணர்வு தான்.
அதன் பின்னர் ஒரு நாள் எனது பல்கலைகழக நண்பர்களுடன் MCயோடு உள்ள KFCயில் சாப்பிட போயிருந்தோம். அங்கே நாம் வாங்கிய கோழிப் பொரியலுடன் ஒரு கோழியின் இறகு ஒட்டியிருந்தது. எம்முடன் இலண்டனில் படித்திவிட்டு வந்திருந்த ஒரு நண்பர் அந்தச் சிறிய இறகை எடுத்துக்கொண்டு KFC மேலாளரிடம் ஏதோ பேசி, இலவசமாக மேலும் சில கோழிப்பொரியல்களுடன் வந்தார். இப்படியான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களின் முறையீடும் அதற்கு அந்த ஹோட்டல்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் நியாயப்படுத்தக்கூடியவையும் வேடிக்கையானவையும் தான்.
இதே போல் தான் தெகிவளை, காலி வீதிக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருவர் ஆட்டுக்குடல் (பாபத் என்று அழைப்பார்களாம்) போட்டு ஒரு கொத்து ஒன்று பொதியாகக் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கிறார். ஒரு மணிநேரம் கழித்து, முக்கால் வாசிக்கும் மேலான கொத்து உண்ணப்பட்டநிலையில், அதனுள் கரப்பான் பூச்சி இருந்ததாக மீண்டும் அந்த உணவுப் பொதியைக் கொண்டுவந்திருந்தார். அந்த உணவக ஊழியகள் அதைத் திறந்து பார்த்தபோது, அதனுள் ஒரு கரப்பான் பூச்சி ஒன்று குற்றுயிரும் குலையுயிருமாக துடித்தவண்ணம் இருந்தது. பாபத் போட்டு கொத்திய கொத்தில் எப்படி கால்கள் இயங்கிய வண்ணம் கரப்பான் பூச்சி இருந்தது என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். குறித்த அந்த நபரே பாதிக்கு மேற்பட்ட கொத்தை சாப்பிட்டு விட்டு, ஒரு கரப்பானை அடித்து போட்டுக்கொண்டு வந்ததாக ஊழியர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். எது எப்படி இருந்தாலும், அவருக்கு மீண்டும் ஒரு புது பாபத் கொத்து போட்டு கொடுக்கப்பட்டது.
நாளை பாம்பு ஒன்றை அடித்து போட்டுகொண்டு குறித்த நபர் வருவார் என அந்த ஊழியர்கள் தமக்குள் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார்கள். ம்ஹ்…! இப்படியும் இவ்வுலகில் ஆட்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மாநகர குப்பை வண்டிகளே…
by nirujah on Jun.22, 2011, under அனுபவங்கள், பதிவுலகம், பொது
நமது அன்றாட வாழ்க்கையில் சுமூகமான ஓட்டத்துக்கு பலரும் பல வழிகளில் உதவுகின்றார்கள். நாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும், முப்பாட்டன் காலத்திலிருந்து பரம்பரைக் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், எனக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடம் கட்டி அதில் நாம் மட்டுமே படிக்க முடியாது. அப்படியே படித்தாலும், சாதாரண ஒரு மாணவனாக ஒரு பாடசாலையில் 50 பேர் கொண்ட வகுப்பில் அடிக்கும் லூட்டிகளும் தேடிப்பார்த்தாலும் கிடைக்காது. அது போல தான், போரூந்துகள், தொடரூர்ந்துகள், சாலை திருத்துவோர், அரிசி, காய்கறிகள் மற்றும் எவையாக இருந்தாலும் நாம் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டும்.

அதே போல தான் நகர் பகுதிகளில் தினமும் அல்லது ஒன்று விட்ட ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள குப்பைவண்டிகளும் தொழிளாலர்களும். அவர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டாலோ, அல்லது வேலைப்பகிஸ்கரிப்பு செய்தாலோ நாம் படும் அவலங்களும் கஷ்டங்களும் நாம் உணர்ந்ததே.
ஆனால் இதையே ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு இத்தொழிலாளர்கள் செய்யும் அட்டகாசமோ அளவுக்கு அதிகம். மற்ற இடங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் கொழும்புக்கு வந்ததில் இருந்து பல இடங்களில் வசித்தாலும், அவை அனைத்தும் தெகிவளை மாநகராட்சி சபைக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள்ளேயே இருந்துள்ளேன். எல்லாப் பகுதிகளிலும், குப்பை சேகரிக்கவருபவர்கள் மக்களிடையே வலுக்கட்டாயமாக ஒரு தொகைப்பணத்தை மாதாமாதம் அறவிடுகின்றர்கள்.
இவ்வாறாக, குப்பை சேகரிக்கச் செல்லும் போது மக்களிடம் பலாத்காரமாக பணம் வாங்குதல் நகராட்சி சட்டத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ சட்டமாக இருக்கிறதோ எனக்குத் தெரியாது. மனிதாபிமான அடிப்படையில், இவர்கள் குப்பை சேகரிக்கப்போகும் இடத்தில் இருக்கின்ற மக்கள் அவர்களாக அன்பளிப்பு அடிப்படையில் பணம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இப்படி அன்பளிப்பு அடிப்படையில் உருவான கலாச்சாரம் தான் இப்போது இப்படி கட்டாய பணவசூலாக மாறியிருக்கிறதோ தெரியாது. எனினும் கண்டிப்பாக இவ்வளவு பணம் தர வேண்டும் அல்லது அடுத்தமுறை குப்பை எடுக்க வரமாட்டோம் என்று மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
குறிப்பாக, இரு வருடங்களுக்கு முதல், நான் தெகிவளை லியனகே வீதியில் வசித்தபோது, அந்த தெருவில் எல்லாத்தரப்பான மக்களும் வாழ்கின்றார்கள். ஒரு சிலரால் மாதம் 100 ரூபாவோ 150 ரூபாவோ கொடுக்கமுடியாமல் இருந்திருக்கலாம் போலும். இதனைக் காரணமாகக் காட்டி, அந்தத் தெருவுக்கே குப்பை எடுக்க வருவதில்லை. அந்தக்காலத்தில் தெருவோரங்களில் குப்பை போடுதல் சட்டவிரோதமாக இல்லாமல் இருந்த காரணத்தால் எம் தெருவில் உள்ள அனைவரும் தினமும் காலிவீதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு குப்பை மேட்டுக்கே எமது குப்பைகளை கொண்டு சென்று வீசி இருந்தோம். ஏன் நான் இப்போது இருக்கும் பகுதியில் கூட மாத முடிவில் கண்டிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணம் வசூலிக்கப்பட்ட பின்னரே, குப்பைகளை அப்புறப்படுத்துக்கின்றார்கள்.
எனக்கு இப்போது இருக்கும் சந்தேகம் எல்லாம், ஒரு ஜனநாயக நாட்டிலே, அரச தொழிலாளர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி, சாதாரண மக்களிடமும் இப்படி பலவந்தமாக காசு வாங்குகிறார்களே இதை மேலதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லையா. அல்லது இத் தொழிலாளர்களின் இந்த பொறுப்பில்லாத செயல்களுக்கு மேலதிகாரிகளும் உடந்தையா?
