செவ்வானச் சிதறல்கள்…

Archive for May, 2011

பிச்சை புகினும் கற்கை நன்றே…

by on May.26, 2011, under பொது

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – ஔவைப்பாட்டி

 

பிச்சைகாரர்கள்: நான் இந்தச் சொல்லைக் பயன்படுத்துவது சரியோ எனக்குத் தெரியாது; இருந்தாலும் வேறு கௌரவமான சொல் எனக்கு கிடைக்கவில்லை. முன்பெல்லாம் நாம் வாழுகின்ற இந்த வறிய நாடுகளிலோ அல்லது வளர்ந்து வரும் நாடுகளிலோ தான் பிச்சைக்காரர்கள் இருக்கின்றார்கள் என நினைத்திருந்தேன். பின்னர், சற்று வெளியே செல்ல நேர்ந்த போது தான், ஐக்கிய இரச்சியம், அமெரிக்கா, கனடா போன்ற அதிவளர்ச்சி பெற்ற நாடுகளிலும் இவர்கள் இருக்கின்றார்கள் என அறிந்து கொண்டேன். ஆனால் என்ன, அந்தந்த நாடுகளுக்கேற்ப அவர்களின் வாழ்கைத்தரமும் தமது தொழிலுக்கு பயன்படுத்தும் யுக்திகளும் வேறுபடுகின்றன.

இலங்கையில் உள்ள பிச்சைக்காரர்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் பலவகை உண்டு. உண்மையாகவே உடல் ஊணமுற்றவர்களாக வேறு தொழில் செய்ய முடியாதவர்கள், உடல் வலு நிறையவே இருந்தும் பிச்சை எடுப்பவர்கள், உடல் வலும் மற்றும் கல்வி வளம் இருந்தும் பிச்சை எடுப்பவர்கள், இயற்கை அனர்த்தம் காரணமாக பிச்சை எடுப்பவர்கள் என்று வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.

பிச்சை எடுப்பவர்களில் எனக்கு அதிக பரிதாபத்தையும், அதிக எரிச்சலையும் தருபவர்கள் சிறுவர்கள். சிறுவர்கள் எனும் போது, கதைக்கத் முடிந்தவர்கள், பயம், வெட்கம், சமூக அந்தஸ்து, அவர்களின் எதிர்காலம் என எதைப் பற்றியும் எண்ணிப்பார்க்க முடியாதவர்கள். இவர்கள் தமது குடும்ப சூழ்நிலையாலோ அல்லது அனாதரவாக்கப்பட்டதாலோ தான் பிச்சை எடுக்கின்றார்கள் என்றாலும், அவர்களின் எதிர்காலத்தை நினைக்கும் போது நான் சற்றே மனம் வருந்தியதுண்டு. இன்னும் எவ்வளவு காலம் தான் இவர்கள் இப்படியே இருக்கப் போகின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சில வேளைகளில், இவர்கள் வீதியால் செல்லும் எமது கையைப் பிடித்துக்கொண்டு, கண்டிப்பாக ஏதாவது தரவேண்டும் என்பது போன்ற ஒரு மிரட்டும் தொனியில் பேசுவார்கள். பொதுவாக இத்தகைய சிறுவர்களுக்கு நான் ஒரு போதும் காசு போட்டது இல்லை. இது போன்ற சிறுவர்களுக்கு காசு குடுப்பதன் மூலம் இவர்களை நாம் பிச்சை எடுப்பதற்கு இன்னும் ஊக்குவிப்பது போன்று உணர்வதோடு மட்டுமல்லாமல், பிச்சை எடுத்து பிழைக்க முடியாமல் போனால் ஏதாவது ஒரு வேலைக்காவது போய் வாழ முனைவார்கள் என்ற நப்பாசையும் தான்.

பிச்சைஎடுப்பவர்களைப் பற்றிப் பேசும் போது, கண்டிப்பாக கணவன் மனைவியாக இருவருமே பிச்சை எடுத்து வாழ்வதோடு தமக்கு என்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்பவர்களை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இப்படியான தரப்பினரை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். இவர்களைப் பார்க்கும் போது கண்டம் துண்டமாக வெட்டியெறியவேண்டும் என்னும் அளவுக்கு கோபம் தான் வருகிறது. இவர்களுக்கு உடல் வலு இருக்கிறது. இருந்தும், சோம்பேறித்தனமாக பிச்சை எடுக்கின்றார்கள். அவர்கள் தான் அப்படி வாழ்கின்றார்கள் என்றால், வருடத்துக்கு ஒன்றாக நான்கு ஐந்து என்று குழந்தைகளையும் பெற்று தெருவில், நடுத்தெருவில் பிச்சை எடுக்க விடுகின்றார்கள். கேவலம் இருவரின் உடல் சுகத்தினால் வருகின்ற ஒரு ஜீவன் நாளை எவ்வளவு வருந்தப்போகின்றது என்பதைப் பற்றி இவர்களால் ஏன் தான் சிந்திக்க முடியாமல் இருக்கின்றதோ!!! இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பல இருந்தாலும், தெகிவளை சந்தியில் உள்ள பிரபல ஆடை விற்பனைக்கடையை அண்டிய பகுதியில் உள்ள ஒரு தம்பதிப் பிச்சைக்காரர்கள் சிறந்த உதாரணம். இவர்களை நான் குறைந்தது 2004ல் இருந்து பார்க்கின்றேன். அவர்களும் மாறுவதாக இல்லை. குழந்தைகள் பிறப்பதும் நிற்பதாக இல்லை.

அடுத்த வகையினர் பேரூந்து போன்ற பொது வாகனங்களில் ஏறி பிச்சை எடுப்பவர்கள். சில வேளைகளில் கணக்கு போட்டு பார்த்தால் நாமெல்லேம் இவர்கள் மேல் பொறாமைப்படவேண்டும். குறிப்பாக ஒருவர் ஒரு பேரூந்தில் ஏறி இறங்கினால் 20 ரூபாவில் இருந்து 40 ரூபா வரை இவருக்கு கிடைக்கும். சராசரியாக 25 ரூபாய் என்று கணக்கு வைத்துக்கொண்டு சிறிய கணக்கீடு ஒன்றைப் பார்ப்போம்:

  • ஒருவருக்கு, ஒரு பேரூந்தில் செலவழியும் நேரம் 10 நிமிடங்கள்
  • ஒரு மணித்தியாலத்துக்கு குறைந்தது 5 பேரூந்துகளில் ஏறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
  • எனவே அவர் ஒரு மணித்தியாலத்தில் 5×25 = 125 ரூபாய் கிடைக்கப் பெறுகிறார்.
  • ஒரு நாளைக்கு, காலை எட்டு மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணிவரை கண்டிப்பாக மேலே கூறிய கணக்கின்படி அண்ணளவு வருமானம் இருக்கும்.
  • ஆக, உணவு வேளை, இடைவேளை போன்றவற்றுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கினாலும் இவர் நாளொன்றுக்கு 12மணிநேரம் பிச்சை எடுக்கலாம்.
  • ஆகவே 125×12 = 1500 ரூபாய் நாள் வருமானம்.
  • அவருக்கு அந்த குறிப்பிட்ட நாளில் இரண்டு நேர சாப்பாடாவது தானமாக கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.
  • ஆக, அவருக்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்கான செலவும் மற்றும் நானாவித செலவுமாக கூடியது 300 ரூபாய் செலவு செய்தால், ஒரு நாளைக்கு அவர் 1200 ரூபாய் சேமிக்கலாம்.
  • இவ்வாறாக, மாதத்துக்கு, 1200×30 = 36000 ரூபாய் சேமிக்கலாம்.
  • தவிர, இவர்களுக்கு வீடு கிடையாது. எனவே மின்கட்டணம், நீர்க்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வருமான வரி என்று எதுவுமே கிடையாது. எனவே, சேமிப்பு அப்படியே இருக்கும்.
  • ஒரு மாதத்தில் 36000 என்றால் ஒரு ஆண்டில் 4,32,000 ரூபாயும் ஐந்து வருடங்களில் 21,60,000 ரூபாயும் சேமிக்க முடியும்.

இனிமேல் பேரூந்தில் யாராவது பிச்சை எடுக்க வந்தால், அவரை மில்லியனரை உபசரிப்பது போல் மரியாதை குடுங்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் பேரூந்தில் நடந்த சம்பவம் ஒன்று. ஒருவர் பேரூந்திலே பிச்சை எடுக்கும் போது, பிரயாணி ஒருவர் தன்னிடம் இருந்த ஒரு ரூபாவை அவருடைய அந்த மத்தளம் போல் தட்டும் கருவிக்குள் போட்டார். அந்த பிச்சைக்காரனோ, அந்த ஒரு ரூபாவை மீண்டும் அவரிடமே திருப்பிக்குடுத்து அவரையே வைத்திருக்கச் சொன்னான். ஒரு வேளை நான் போட்ட கணக்குக்கு ஏற்ப வாழ்பவரோ என்னவோ?

இதைவிட, கட்புலன் குறைந்தவர், அங்கவீனர்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோர் என பலரும் பலவழிகளில் பிச்சை எடுக்கின்றனர். என்ன இருந்தாலும், நாளாந்தம் தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத பல குடும்பங்கள் நம்மிடையே பல இருக்கின்றன. அதே போல், பிச்சை எடுத்து தண்ணி அடிப்பவர்களும் இதே சமுதாயத்தில் தான் வாழ்கின்றார்கள்.

பாத்திரம் அறிந்து பிச்சையிடு

13 Comments :, , , , , , , , , more...

வந்தவர்கள்

free counters