Archive for September, 2009
அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
by nirujah on Sep.12, 2009, under கணணி

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?”
நியாயமான ஒரு கேள்வி
“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?” –
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்.”
“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.
“இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.
“சரி”
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants….”.
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.
“இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?
“MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”
“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?” –
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
“சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”
“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்”
“500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?”
“இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு “ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு” புலம்ப ஆரம்பிப்பான்.
“அப்புறம்?” – அப்பா ஆர்வமானார்.
“இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
“இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்”னு சொல்லுவோம்.
“CR-னா?”
“Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்”னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.”
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
“இதுக்கு அவன் ஒத்துபானா?”
“ஒத்துகிட்டு தான் ஆகணும்.
முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?”
“சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?”
“முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.”
“அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு.”
“அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.”
“அப்போ இவருக்கு என்னதான் வேலை?” –
அப்பா குழம்பினார்.
“நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை.”
“பாவம்பா”
“ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.”
“எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?”
“ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.”
“நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!”
“இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.”
“இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?”
“வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க…
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே “இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு”
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.”
“அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?”
“இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.
புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.”
“ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?”
“அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க”
“கிளையன்ட் சும்மாவா விடுவான்?
ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?”
“கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.”
“எப்படி?”
“நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.”
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்”.
“சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?”
“அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்.”
“அப்புறம்?”
“ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.”
“அப்புறம்?”
“அவனே பயந்து போய்,
“எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு”
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.”
இதுக்கு பேரு “Maintenance and Support”.
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
“ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு” இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.
“எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.”
குறிப்பு: இதை எழுதியது சத்தியமாக நானில்லை. இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. சுவாரசியமாக இருந்ததால் பகிர்ந்து கொள்கின்றேன்.
விசித்திர உலகம்
by nirujah on Sep.11, 2009, under பதிவுலகம்
வழமை போல் அல்லாது இன்று மதிய உணவுக்கு பின்னர் அலுவலகத்துக்கு செல்ல நேர்ந்தது. வழமையாக, அதிகாலை 8.30, ( இது எனக்கு அதிகாலைதான்) மணிக்கே பேரூந்து எடுத்து பொறளைக்கு போகும் போது பாதி நித்திரையாகவும் பாதி முழிப்பாகவும் செல்வதால் சுற்றத்தை கூர்ந்து கவனிக்க தவறிவிட்டேனோ என்னவோ, இன்று மதியம் மிகவும் தெளிவாக சென்றபோது என் கவனத்தை ஈர்த்த சம்பவம். கண்டிப்பாக பதியவேண்டும் என்று எண்ணியதால் பதிகின்றேன்.
வெள்ளவத்தைக்கும் பம்பலபிட்டிக்கும் இடையில் ஒரு தரிப்பிடத்தில் நான் சென்றுகொண்டிருந்த பேரூந்தில் (154) ஒரு ஆணும் பெண்ணும் ஏறினார்கள். சாதாரணமான பார்வையில் அவர்கள் அன்றாடம் பேருந்துகளிளோ அல்லது பொது இடங்களிலோ பாட்டுப்பாடி மற்றவர்களிடம் பெற்ற யசகத்தில் தமது வாழ்வைக்களிப்பவர்கள் என்றே தோன்றியது.
ஆணின் தோளில் அழுக்கு தோய்ந்த ஒரு பை. அதற்குள்ளே சில துணிமணிகளூம் அவற்றுக்கு மேலாக அவர்கள் பாட்டுப்பாடும் போது தாளம் போட பயன்படும் மேளம் போன்ற மிகச்சிறிய கருவி. அவர் முற்றிலும் பார்வையிழந்தவர் என் நினைக்கின்றேன், ஒரு கறுப்பு நிற கண்ணாடி அணிந்திருந்தார். பக்கத்தில் வந்த பெண் பெரும்பாலும் அவரது மனைவி போன்றே இருந்தார். அவருக்கும் பார்வைக்குறைபாடு இருக்கும் போல் தோன்றியது. அவரது கையில் ஒரு கண்பார்வையற்றோர் பயன்படுத்தும் கோலும் இருந்தது.
பேரூந்தில் ஏறும்போதே அவர்கள் இது பொறளைக்கு போகுமா ( சிங்களத்தில் தான்) என்று கேட்டுவிட்டு தான் ஏறினார்கள். அவர்களின் இந்த பயணம் வயிற்றுப்பிழைப்பு காசு கேட்பதற்கு அல்ல, அவர்கள் எங்கேயோ செல்கின்றார்கள் என்பதை புரிந்துகொண்டேன். அப்போது அங்கே வந்த இரசீது வழங்குனர், மதகுருமாருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருவரையும் அமரவைப்பதற்காக, அதில் முன்னரே கண்டும் காணாதவர்கள் போல்இருந்த இருவரை எழுப்பி அவர்களை அமரச்செய்தார்.
இதுவே என்னையும் எனது கவனத்தையும் அவர்கள்பால் திருப்பியது. என்ன ஒரு அன்னியோன்னியமான் தம்பதிகள். எப்படி சாதாரணமான இரு காதாலர்களோ, தம்பதியினரோ இருக்கையில் அமர்வார்களோ அதே போல், ஆண் அவர் மனைவியை முதலில் அமரும்படி செய்தார். பின்னர் தான் தட்டுத்தடுமாறி அமர்ந்துகொண்டார். அவர் அமர்வதற்கு மனைவி உதவிசெய்தார்.
பின்னர், இரசீது வழங்குனர் அருகில் வரும்போதெல்லாம் அவர் சத்ததை கேட்டுவிட்டு அந்த பெண்மணி, “பொறளைக்கு எவ்வளவு தம்பி…?” என்று கேட்டார். ஆனால் இரசீது வழங்குனரோ அதை காதில் போட்டுக்கொள்ளாதவர் போல் சென்றுவிட்டார். பின்னர் ஒவ்வொரு முறையும் அவர் வரும்போதெல்லாம் அந்த பெண்மணி அதே கையில் காசு வைத்துக்கொண்டு அதே கேள்வியைக்கேட்டார். அவரும் அதை கணக்கில் எடுக்கவில்லை. அவர் அவர்களிடம் காசு எடுக்க விரும்பவில்லை என தெரிந்தது. இதையெல்லாம் அருகில் நின்று பாத்துக்கொண்டிருந்த எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இறுதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை தாண்டும்போது அவர் சொன்னார், பரவாயில்லை காசுவேண்டாம் என்று. அது வரைக்கும் அந்த பெண்மணி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.
அப்போது தான் நான் எண்ணிப்பார்தேன், நாம்எத்தனை முறை பேருந்தில் காசு கொடுக்காமல் பிரயாணித்திருக்கின்றோம். வேண்டுமென்று குடுக்காமல் விட்ட சந்தர்பங்களை விட சன நெரிசல், சில்லறை இல்லாமை போன்ற காரணங்களாலும் நான் சில சமயம் காசு குடுக்காமலே பயணித்திருக்கின்றேன்.
எம்மைவிட எவ்வளவோ வித்தியாசமான உலகத்தில் அவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் குணத்தில் எம்மை விட உயர்ந்தவர்கள் என்பதை நான் எனக்குளேயே எண்ணிப்பாத்துக்கொண்டேன். உடனேயே அவர்களின் படத்தோடேயே இந்த பதிவை போட நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் அவர்கள் தான்.
குறிப்பு: அதிகமாக இப்படிப்பட்ட விடயங்களை எழுதிப்பழக்கமில்லமையால், எனது எழுத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். கண்டிப்பாக திருத்திக்கொள்கின்றேன்.
